படித்த இளைஞர்களுக்கே கட்சியில் முன்னுரிமை - சைலண்ட்டாக கார்னர் செய்யும் ரஜினி...!
நான் அரசியலுக்கு வருவேன் எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார்.
உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
ரஜினியின் இந்த அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நீண்ட நாட்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கூறி வந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கட்சியின் பெயர், கொடி, கொள்கை அறிவிப்பு தொடர்பாக தனது அரசியல் ஆலோசகர்கள், ரசிகர் நற்பணி இயக்க முக்கிய நிர்வாகிகள் சிலருடன் ரஜினி இன்று ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள் தேர்வு குறித்து ஆலோசித்ததாகவும் பெருமளவில் படித்த இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க ரஜினி விரும்புவதாகவும் தெரிகிறது.
ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் திட்டங்களை ஏற்கனவே ரஜினி தரப்பு தயாரித்துவிட்டதாகவும் இது தொடர்பான ஆலோசனையும் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த பணிகளுடன் நிர்வாகிகள் தேர்வும் முடிந்ததும் கட்சியின் பெயர், கொடி, சின்னம், கொள்கைகளை ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் அறிவிக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் விமர்சிக்காமல், தனது கொள்கை மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்தே அவர் அரசியல் செய்ய இருப்பதாகவும் அவரது தரப்பினர் தெரிவித்தனர்.