டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் ரஜினி... அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின்!
டிவிட்டர் அரசியல் நடத்துபவர் என்று அண்மையில் பெயர் வாங்கியவர் கமல்ஹாசன். தானும் அரசியல் ரீதியாக பலரை விமர்சனம் செய்து, தானும் அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று போக்குக் காட்டி, அண்மைக் காலமாக அரசியல் ஆட்டம் காட்டி வந்தார்.
ஆனால், வெகு காலமாகவே அரசியல் அரசியல் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்தபோதும் அவர்களுக்குப் போக்குக்காட்டி வந்த ரஜினி, இன்று தான் உறுதியாக அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தார்.
இன்று ரசிகர் சந்திப்பின் கடைசி நாள் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்கள் மத்தியில் பேசத் துவங்கிய ரஜினி, சற்று நேரத்துக்கு பீடிகை போட்டார். பின் திடீரென நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார். அந்த நேரத்தில், ரசிகர்களின் கைத்தட்டல் மண்டபத்தை முடக்கியது.
உடனே தன் சினிமா பாணி ஸ்டைலில், கண்ணாடியை கழற்றி, கையில் தூக்கி, மேலே காட்டி பார்த்து, பின் மீண்டும் மாட்டிக் கொண்டு, சற்று அமைதி காத்தார். பிறகு, கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டு விட்டு, பாபா முத்திரையைக் காட்டி... சற்று நேர இடைவெளி விட்டு... அமைதிகாத்தார். அந்த இடைப்பட்ட நேரத்தில் ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். இடையில் தண்ணீர் பாட்டில் கொடுக்கப் பட, தண்ணீர் குடித்து விட்டு.. மீண்டும் பேசத் தொடங்கினார். இது காலத்தின் கட்டாயம் என்று உறுதியாக சொன்னார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பு தேசிய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. தேசிய ஊடகங்களும் பெரிய அளவில், ரஜினியின் அரசியல் பிரவேச செய்திகளை ஆர்வத்துடன் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இந்நிலையில், சமூக ஊடகமான டிவிட்டரில், ரஜினியின் அறிவிப்பு ட்ரெண்ட் ஆனது. முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தது ரஜினி குறித்த செய்தி.