பாட்டு பாடிக் கொண்டே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் மூலம் தப்பித்த ராஜேந்திர பாலாஜி.. சவுக்கு சங்கர் பகீர்.
நீர் வழித்தடத்தில் பயணித்தால் தப்பிக்கலாம் என பாஜகவினர் அவருக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர் என்பதுதான் போலீசுக்கு கிடைத்த தகவல், அதாவது நதி மார்க்கமாக நீர் வழியில் பயணித்து கர்நாடகாவை அடையவேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருந்துள்ளது.
சாலை மார்க்கமாக சென்றால் போலீசிடம் சிக்கி வாய்ப்புள்ளது என்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக படகில் பாட்டு பாடிக் கொண்டே தப்பித்தார் ராஜேந்திரபாலாஜி என சவுக்கு சங்கர் சுவாரஸ்யம் தெரிவித்துள்ளார். தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலி குண்டுவிலிருந்து பரிசலில் அவர் தப்பித்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது கே. டி ராஜேந்திர பாலாஜி. அமைச்சராக இருந்த போது ஆவின் நிறுவனம் மற்றும் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக அவர்மீது ஏராளமான புகார்கள் குவிந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என்பதால் ராஜேந்திர பாலாஜி தப்பி தலைமறைவானார். அவர் கேரளாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்றும் கர்நாடகத்தில் பதுங்கி இருக்கிறார் என்றும் அவர் மும்பை வழியாக டெல்லிக்கு பறந்து பதுங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் அசனில் பி.எம் சாலையில் டி-ஷர்ட், காவி லுங்கியுடன் காரில் சென்று கொண்டிருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார் தன்னை சுற்றி வளைத்துவிட்டனர் என்பதை அறிந்து அவர் தப்ப முன்றதாகவும் ஆனால் போலீசார் லாவகமாக அவரை சுற்று வளைத்து கை செய்த பரபரப்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. மேலும் அவருடன் அந்த காரில் இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணன் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியது தெரிய வந்தது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரது தலைமறைவு, கைது படலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலீசாரும் ராஜேந்திரபாலாஜிக்கு யாரெல்லாம் உதவினார்கள், எங்கெல்லாம் அவர் தங்கினார் எப்படி தப்பினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், ராஜேந்திரபாலாஜி எப்படி தப்பினார் என்றும் அவர் ஏன் கர்நாடக மாநிலத்தை தேர்வு செய்தார் என்பது குறித்து பகீர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது:-
ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோதே தான் ஒரு முழு பாஜக ஆதரவாளர் என்பதை காட்டும் வகையில் அவர் நடந்து கொண்டார். அவரின் பேச்சுகள் முழுக்க முழுக்க பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவாகவே இருந்தது. இந்நிலையில்தான் அவர் தப்பிப்பதற்கு அதிமுகவினரை காட்டிலும் பாஜகவினர் உதவி செய்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணன் அவருக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவருடைய ஆலோசனையின் படிதான் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக பெங்களூருவை தேர்ந்தெடுத்துள்ளார். அதிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது பணியாற்றிய சிக்மங்களூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஹசன் மாவட்டத்தை தேர்வு செய்து அங்கு பதுங்கியுள்ளனர்.
இது ஒருபுறம் இருந்தாலும் அவர்கள் தப்பித்தது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று, அதாவது சாலை மார்க்கமாக சென்றால் போலீசிடம் அகப்பட்டு கொள்வோம் என்பதால் நீர் வழித்தடத்தில் பயணித்தால் தப்பிக்கலாம் என பாஜகவினர் அவருக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர் என்பதுதான் போலீசுக்கு கிடைத்த தகவல், அதாவது நதி மார்க்கமாக நீர் வழியில் பயணித்து கர்நாடகாவை அடையவேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருந்துள்ளது. இதற்காக ஒகேனக்கலுக்கு சென்று தமிழகத்தின் எல்லைப் பகுதியான பிலிகுண்டுவிலிருந்து பரிசல் மூலமாக சினிமா திரை கதையில் வருவது போல பாட்டு பாடிக்கொண்டே பெங்களூருவுக்கு தப்பித்திருக்கிறார்கள். உடனிருந்த பாஜகவினர் கோரஸ் பாடிக்கொண்டே கர்நாடக மாநிலத்தை ராஜேந்திர பாலாஜி குழு அடைந்துள்ளது எனசவுக்கு சங்கர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.