என் நண்பர்…என் சகோதரர் … அனந்த குமாரை இழந்து தவிக்கிறேன் !! பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கம் !!
எனது உண்மையான அருமை நண்பர்…எனது சகோதரர்… எனது வழிகாட்டி… மனிதாபிமானம் மிக்கவரை நான் இழந்து தவிக்கிறேன் என மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் இன்று அதிகாலை 2 மணியளவில் யிரிழந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அனந்தகுமார் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அனந்த குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். மத்திய இரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார் மறைவுக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதே போல் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு அவரது நெருங்கிய நண்பரும், பாஜக மாநிலங்களைவை உறுப்பினருமான ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் , இன்று எனக்கு ஒரு சோகமான நாள்…எனது நண்பர், எனது சகோதரர், எனது வழிகாட்டி அனந்தகுமார் மறைந்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அனந்தகுமார் எனது குடும்பத்தில் ஒருவர்..எனது அரசியல் நண்பர்களிலேயே உண்மையானவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மனதாபிமானம் மிக்க மனிதர் என்றும்… இவ்வளவு விரைவில் நீ மறைந்து போவாய் என்று நான் நினைக்கவில்லை என்றும், போய் வா என் நண்பனே என ராஜீவ் சந்திரசேகர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.