"பிரதமர் மோடி ஊழல் குறித்தெல்லாம் பேசுவார். ஆனால், கர்நாடகாவில் இதைப் பற்றி பேசினால், மக்கள் சிரிப்பார்கள். பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகா மாநிலத்தில் 40 சதவீத கமிஷன் அரசாங்கம் நடக்கும் ஊழல் நிறைந்த மாநிலமாக உள்ளது”
கர்நாடக மாநிலத்தில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தேர்தல்
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் உத்திகளை வகுத்து ஆளும பாஜக களமிறங்கியுள்ளது. இதேபோல பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கர்நாடக தலை நகர் பெங்களூருவுக்கு வருகை தந்தார். பின்னர் பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “கர்நாடகா ஒரு இயற்கையான காங்கிரஸ் கட்சிக்குறிய மாநிலம் ஆகும். கர்நாடகாவில்தான் காங்கிரஸ் கட்சியின் ஆன்மா உள்ளது.
காங்கிரஸாருக்கு பொறுப்பு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 150 தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து, தேர்தல் வெற்றிக்காக நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுபட்டு சரியான பிரச்சினைகளில் மற்றும் தகுதியை அளவுகோலாகக் கொண்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சித் தலைவர்களான சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பிற தலைவர்களுக்கு இதில் மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. கர்நாடகாவில் ஒன்றாகப் போராடி 150 இடங்களை வெல்வது அவர்களுடைய முழு பொறுப்பு ஆகும்.
பாஜகவின் ஊழல் ஆட்சி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பதாக இருந்தாலும் சரி, கட்சி அமைப்பிலும் சரி, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஏழை எளிய மக்கள், சிறு வணிகர்கள், அனைத்துப் பிரிவினருக்காகவும் உழைக்கும் ஆட்சியைக் கொடுக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. கர்நாடகாவில் பாஜகவினர் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அழித்து விட்டார்கள். வேலைகளை உருவாக்கும் நிலையில் பாஜக அரசு இல்லை. பிரதமர் மோடி ஊழல் குறித்தெல்லாம் பேசுவார். ஆனால், கர்நாடகாவில் இதைப் பற்றி பேசினால், மக்கள் சிரிப்பார்கள். பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகா மாநிலத்தில் 40 சதவீத கமிஷன் அரசாங்கம் நடக்கும் ஊழல் நிறைந்த மாநிலமாக உள்ளது” என்று ராகுல் காந்தி பேசினார்.
