கின்னஸ் புத்தகத்தில் ராகுல் பெயர் இடம் பெற வாய்ப்பு.... எதற்கு தெரியுமா ?
மிகவும் அரிதான ஒரு காரணத்திற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
பொறியியல் மாணவர்
பலரும் மிகக் கடினமான சாதனைகளைப் படைத்து உலகக் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவார்கள். அதில், மிகவும் அரிதான ஒரு காரணத்துக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் போகும் ராகுல் காந்தியின் பெயர் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் திவான், இது குறித்து உலகக் கின்னஸ் சாதனை புத்தகக் குழுவிற்கு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார்.
ராகுலின் தொடர் தோல்விகள்
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பல தோல்விகளைச் சந்தித்து வருகிறார்.
அவரது அரசியல் மேடைப் பேச்சுக்கள் தொடங்கி சமீபத்திய மாநிலத் தேர்தல் தோல்விகள் வரை பலவும் அவருக்கு எதிர்மறையான விளம்பரத்தையே பெற்றுத் தந்துள்ளன.
தோல்வியே வெற்றியின் முதல் படி என்ற தன்னம்பிக்கையோடு அவரும் பல தோல்விப் படிகளில் ஏறிக் கொண்டுதான் இருக்கிறார்.
கின்னஸ் சாதனை
இந்த நிலையில்தான், மத்தியப் பிரதேச மாநில மாணவர் விஷால் திவான் அனுப்பிய விண்ணப்பத்தில், ராகுல் காந்தி தலைமையில் பல மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 27 தோல்விகளைக் கண்டுள்ளதாகவும், ஒரே நபர் தொடர்ந்து 27 தோல்விகளை சந்தித்திருப்பதும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய சாதனை என்றும் தெரிவித்திருந்தார்.
ஒப்புதல் சீட்டு
உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்குத் தேவையான அளவை விட நிச்சயம் ராகுல் காந்தி அதிகமான புள்ளிகளைப் பெற்றிருப்பார் என்றே கருதுகிறேன் என்றும் விண்ணத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கட்டணத்தையும் விஷால் திவான் அனுப்பியிருந்தார்.
விண்ணப்பக் கட்டணத்தையும், விண்ணப்பத்தையும் பெற்றுக் கொண்ட கின்னஸ் புத்தகக் குழுவினர், விண்ணப்பம் கிடைக்கப் பெற்றதற்கான ஒப்புதல் சீட்டையும் அனுப்பி வைத்தனர்.
நிராகரிக்கப்படுமா?
ஆனால், அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கின்னஸ் புத்தகக் குழு, இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ராகுலின் பெயர் இடம்பெறுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து எந்தத்தகவலையும் இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில், தற்போது உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலையும் ராகுல் காந்தி சந்தித்துவிட்டார். விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்கப் போகும் ராகுல் காந்தியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.