பஞ்சாப் காங்கிரஸ் ஆட்சியை சும்மா விடக் கூடாது.. உடனே கலைச்சுவிடுங்க.. கொதிக்கும் அர்ஜூன் சம்பத்!
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தீவிரவாதிகளைக் கொண்டுதான் இவ்வாறு நடந்து கொண்டது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சேலத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பஞ்சாப்புக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் சாலை வழி பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது சர்ச்சையானது. இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பஞ்சாப் அரசைக் கண்டித்து சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், போராட்டம் நடத்த வந்தவர்களைக் காவல்துறையினர் தடுத்தனர். இதனால் இந்து மக்கள் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், சுமார் 50 பேர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதன் பின்னர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்துதான் பஞ்சாப் மாநிலத்த்துக்குள் பிரதமர் மோடியை வரவிடாமல் தடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக பிரதமர் மோடியின் கான்வாய் வாகனம் 20 நிமிடம் பஞ்சாப் மாநில பாலத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். இதற்காக பஞ்சாப் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டிக்கிறோம். பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தீவிரவாதிகளைக் கொண்டுதான் இவ்வாறு நடந்து கொண்டது.
இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்சாப் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாப்பில் ஆட்சியைக் கலைத்து விட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று அர்ஜீன் சம்பத் தெரிவித்தார்.