புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை, எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை, எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமமுக மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு அக்கட்சியில் இருந்து ஏராளமான முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், அதிமுகவினரின் எந்த ஒரு வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் அமமுகவினர் செல்லக்கூடாது என டிடிவி.தினகரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை மீறி கோவை மாவட்ட நிர்வாகிகள் சென்றதால் அவர்களை கட்சியில் இருந்து டிடிவி.தினகரன் நீக்கினார். இதேபோல், தலைமையின் மேல் உள்ள அதிருப்தி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கூண்டோடு வெளியேறினர்.

இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை புகழேந்தி தனியார் ஓட்டலில் நேரில் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், டிடிவி.தினகரனை அடையாளம் காட்டியதே தான் என புகழேந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவிக்கவே நான் அவர்களை சந்தித்தேன். இதை தவறாக எடுத்து அமமுக தொழில்நுட்ப பிரிவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. எனக்கு தெரியாமல் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது என்றார். 

இந்நிலையில், புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை ரகசியமாக சந்தித்து பேசியது டிடிவி.தினகரனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன் புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். விரைவில் புகழேந்தி மேல் கட்சி தலைமை சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.