puducherry school children special food told narayanasamy
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதியம் கொடுக்கப்படும் வழக்கமான உணவுக்கு பதிலாக சப்பாத்தி, தயிர்சாதம், சுவையுடன் கூடிய உணவும், இனிப்புகளும் வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை அடுத்த திருபுவனை சன்னியாசி குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.32 லட்சம் செலவில் நவீன வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு உபகரணங்கள், ஓய்வு அறைகள், அனைத்து வகுப்பறைகளிலும் மின் விசிறிகள், தேசிய கொடிக்கு தனி கொடி மேடை, விழா மேடை, புதிய கரும்பலகைகள் என பள்ளி முழுவதும் புதிதாக புனரமைக்கப்பட்டு மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுவையில் அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி, போட்டு தரமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதற்காக மாணவர் மீது ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக் கூட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்றும் அவர் கூறினார்..
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுவையான உணவு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதன் படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழக்கமான உணவுக்கு மாற்றாக சப்பாத்தி, தயிர் சாதம் மற்றும் சுவையுடன் கூடிய உணவும், இனிப்பு வகைகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் நாராயணசாமியின் இந்த அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
