முதல்வர் கனவில் அங்கு சென்றவர் தொப்பி போட்டுக்கொண்டு சுற்றுகிறார். இதேபோல எம்.பி. கனவில் சென்றவர் ஏமாந்து போயிருக்கிறார். அவரை முதல்வர் அலுவலகத்தில் உட்காரக்கூட வைப்பதில்லை. 

புதுச்சேரியில் பொம்மலாட்டத்தை நடத்துபவர் ஆளுநர் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

துரோகம் செய்தவர்கள்

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் பாஜக ஆட்சி முழுமையாக வந்துவிடும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து பேசி வருகிரார். இந்நிலையில் புதுச்சேரியில் ஊசுடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாராயணசாமி பேசும்போது, “கடந்த 2016-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சிலருக்கு சீட் கொடுத்து 5 ஆண்டுகள் பதவியை அனுபவித்தார்கள். அப்படி பதவியை அனுபவித்து விட்டு கட்சிக்கு துரோகம் செய்து சென்றவர்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். முதல்வர் கனவில் அங்கு சென்றவர் தொப்பி போட்டுக்கொண்டு சுற்றுகிறார். 

என்னை மிரட்டினார்கள்

இதேபோல எம்.பி. கனவில் சென்றவர் ஏமாந்து போயிருக்கிறார். அவரை முதல்வர் அலுவலகத்தில் உட்காரக்கூட வைப்பதில்லை. தமிழை மறந்துவிட்டு இந்தியில் கட் அவுட், தொப்பி அணிந்து தரமற்ற அரசியலை அவர்கள் செய்கிறார்கள். வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ என்ற மூன்று மந்திரங்களை வைத்துக் கொண்டு தரமற்ற அரசியலை செய்கிறார் பிரதமர் மோடி. என்னையும்கூட மிரட்டிப் பார்த்தார்கள். பாஜகவுக்கு பயப்படுபவன் நான் இல்லை. இறக்கும் வரை நன் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்தான். பின்னால் அழுக்கு மூட்டையை வைத்திருப்போர் மட்டுமே பயப்படலாம். காங்கிரஸ் ஆட்சியில் 4 ஆண்டுகள் 10 மாதங்கள் பதவியில் இருந்து விட்டு அங்கு ஓடி என்ன கிடைத்தது?

பொம்மை ஆட்சி

புதுச்சேரியில் ஆட்சிய அமைத்து ஓராண்டு ஆகிறது. அதிகப்படியாக மத்திய அரசிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்கி இருக்கிறார்களா? காங்கிரஸ் ஆட்சியில் 10 சதவீதம் கூடுதலாக நிதியை வாங்கினோம். தற்போது எதுவுமே நடக்கவில்லை. புதுச்சேரிக்கு வந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஏதாவது புதிய திட்டத்தை அறிவித்தார்? காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புதல் கொடுத்த திட்டங்களையும், ஆளுநராக கிரண்பேடி நிறுத்தி வைத்த கோப்புகளையும் தூசி தட்டி கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் பொம்மை ஆட்சிதான் நடக்கிறது. பொம்மலாட்டத்தை ஆளுநர் நடத்த அதில் இங்குள்ளோர் பொம்மையாக ஆடுகிறார்கள்" என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.