புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு இன்று கொரோனா உறுதியான நிலையில், தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
புதுச்சேரி முதல்வராக கடந்த 7ம் தேதி ரங்கசாமி பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவரது அமைச்சரவை விரைவில் பதவியேற்கவுள்ளது. இந்நிலையில், ரங்கசாமிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாகவே சோர்வாக இருந்த ரங்கசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் ரங்கசாமி.
