விடிய விடிய தர்ணா போராட்டத்தில் நாராயணசாமி… அதிரடிப் படை குவிப்பு… புதுச்சேரியில் பதற்றம் !!
புதுச்சேரி ஆளுநரைக் கண்டித்து நேற்று முதல் விடிய விடிய போராட்டம் நடத்தி வரும் முதலமைச்சர் நாராயணசாமி அந்த இடத்தைவிட்டு அகல மறுத்து வருவதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இததையடுத்து அங்கு அதிரடிப் படை குவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப் படும் அனைத்து திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பெடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.
மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார்.
மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தொண்டர்களுடன் விடிய விடிய நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
2-வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், சென்னை, நெய்வேலியில் இருந்து அதிவிரைவுப்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தலைமைச்செயலாளரின் கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படையினரை அனுப்பியுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் பதற்றம் நிலவி வருகிறது.