சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியதையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது. ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், முன்னாள் அமைச்சர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர், சசிகலா தரப்பிலிருந்து ஒவ்வொருவராக ஓ.பி.எஸ் பக்கம் வரத்தொடங்கினர். இதையடுத்து சசிகலா அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என கூறி கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அனைவரையும் தங்க வைத்தார்.

இதனிடையே சசிகலா முதலமைச்சர் ஆக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது எடுபடவில்லை. சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனால் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழு தலைவராக்கி விட்டு சசிகலா சிறைக்கு சென்றார். இதையடுத்து பொதுமக்களும் தொகுதிவாசிகளும் அவர்களது எம்.எல்.ஏக்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தருமாறு கேட்டனர்.

ஆனால் அவர்கள் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் செல் இணைப்பை துண்டித்து விட்டனர். இதைதொடர்ந்து தொகுதிவாசிகளின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் எடப்பாடிக்கு ஆதரவாகவும் ஓ.பி.எஸ்க்கு எதிராகவும் வாக்களித்தனர்.

இதனால் பொதுமக்கள் கடும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். வெகு நாட்களாக தொகுதி பக்கம் வராமல் ரிசார்டிலேயே தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் இனியும் தொகுதி பக்கம் வரகூடாது என வலைதளங்களிலும் போஸ்டர்களிலும் அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்களும் தொகுதிவாசிகளும் இளைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தும் பல எம்.எல்.ஏக்கள் சென்னையிலேயே சுற்றிக்கொண்டு திரிகிறார்கள். தொகுதி பக்கம் செல்வதற்கே அச்சமாக இருக்கிறது என பயப்படுகிறார்களாம்.

இந்நிலையில் புதிய அமைச்சரவை எம்.எல்.ஏக்களின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளது. அதையும் மீறி சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு பயம்தான் வெளியே தென்படுகிறதாம்.

இதன் ஒரு பகுதியாக மேலூர் எம்.எல்.ஏ செல்வம் தொகுதிக்கு செல்லாமல் சென்னை ஹாஸ்டலிலேயே தங்கி கிடக்கிறாராம்.

அக்கறையுள்ள அவரின் தொகுவாசி இளைஞர் ஒருவர் தொலைபேசி மூலம் செல்வத்திகு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு இளைஞரிடம் எம்.எல்.ஏ செல்வம் ஏடாகூடமாக பேசி இருக்கிறார்.

பதிலுக்கு அந்த இளைஞர் உங்கள் குரலில் மிரட்டல் தொனி தெரிகிறது. தொகுதி பக்கம் வாருங்கள் பார்த்து கொள்கிறோம் என்று மிரட்டி விட்டு செல்லை வைத்துள்ளார்.

இந்த வாய்ஸ் மெசேஜ் அனைத்து வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது. இதனால் மற்ற சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் பீதியை கிளப்புகிறதாம்.

எடப்பாடியை ஆதரித்த எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமன்றி சபாநாயகருக்கும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எதிர்ப்பு வலுத்துள்ளதால் கட்சிகளின் கூட்டத்திற்கு மற்றும் நிகழ்சிகளுக்கு கூட போலீஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பொதுமக்களின் ஆதரவு இல்லாமல் புதிய அமைச்சரவை என்ன பாடு பட போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.