PTR palanivel rajan alert IT wing

திமுக தகவல்தொழில்நுட்ப அணிக்கு மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதிவாரியாக ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இதற்கான நேர்காணல் மதுரையில் இன்று நடைபெற்றது.

திமுகவில் தகவல்தொழில்நுட்ப அணி என்ற புதிய அணி கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதன் செயலாளராக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தொழில்நுட்ப அணிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், இது குறித்த விரிவான அறிக்கை ஒன்றை திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் அண்மையில் சமர்ப்பித்தார். 

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த அணிக்கான ஒருங்கிணைப்பாளர்களை நேர்காணல் செய்து தேர்ந்தெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு, மதுரை புறநகர் வடக்கு, மதுரை புறநகர் தெற்கு ஆகிய நான்கு திமுக மாவட்டங்களுக்கான நேர்காணல் இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. 

இதில் மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு, மதுரை புறநகர் வடக்கு ஆகியவற்றிக்கான நேர்காணல் இன்று காலை மதுரை பாண்டியன் ஹோட்டலில் உள்ள போர்ட் ரூமில் நடைபெற்றது. திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் சுப. சிவப்பிரகாசம், அண்ணாநகர் கார்த்திக் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். குறிப்பிட்ட மாவட்டத்திற்கான நேர்காணல் நடைபெறும்போது அந்தந்த மாவட்ட செயலாளர் உடன் இருந்தனர். 

இன்று நடைபெற்ற நேர்காணலில் மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திமுகவில் உள்ள 65 மாவட்டங்களுக்கும் தலா ஒரு ஒருங்கிணைப்பாளர் மற்றும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு ஒருங்கிணைப்பாளர் என மொத்தம் 299 ஒருங்கிணைப்பாளர்கள் முதல்கட்டமாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணிகள் அடுத்து வரும் வாரங்களில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். அதன் பிறகு ஊராட்சி, கிளை என பூத் அளவு வரை பல மட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

அடிப்படை கல்வித்தகுதி, கணினித்திறன், கட்சியின் மீது உள்ள பற்றுதல் என பல காரணிகளின் அடிப்படையில் இந்த நேர்காணல் நடைபெறுகிறது.