கூர்க்கலாந்து தனிமாநிலக் கோரிக்கை - டார்ஜிலிங்கில் தீவிரமடைகிறது போராட்டம்
மேற்குவங்க மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் வங்கமொழி கட்டாயமாக்கப்படுவதாக முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அண்மையில் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால் கூர்க்கா இன மக்கள் அதிகமாக வாழும் டார்ஜிலிங்கில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அரசின் உத்தரவுக்கு எதிராக கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததனர். கடந்த வியாழக் கிழமை இக்கட்சியின் தலைவர் பிமல் குருங் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கூர்மையான ஆம்புகள், அரிவாள், வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் இந்த அத்துமீறிய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறி கடந்த திங்கள் கிழமை முதல் டார்ஜிலிங் முழுவதும் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் இன்று 6வது நாளை எட்டியுள்ளது.
கூர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தெருக்கள் யுத்த பூமியாக காட்சியளிக்கிறது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 5 க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளை டார்ஜிலிங்கிற்கு முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அனுப்பி உள்ளார்.. பிமல் குருங்கின் அலுவலகத்திலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பற்றி எரிந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வரும் திங்கள் கிழமை கூர்க்கா தலைவர்களுடன், மத்திய மற்றும் மேற்குவங்க அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.