இந்தி திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க். கம்யூ. கட்சித் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க். கம்யூ. கட்சித் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி தான் இந்தியாவின் மொழி, இந்தி இணைப்பு மொழியாகும் தருணம் வந்துவிட்டது என்றுள்ளார். மாநிலங்களுக்குள் இனி கடிதப் போக்குவரத்து இந்தியில் தான் இருக்க வேண்டும் எனவும் முன் மொழிந்துள்ளார். இதன் மூலம் அரசமைப்பு சட்டம் அவமதிக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் 8 ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என்பது நிராகரிக்கப்படுகிறது.

மொழிவாரி மாநிலங்கள் பற்றிய ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தியலும், மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா, பன்மைத்துவமே அடிப்படை என்கிற கூட்டாட்சி கோட்பாடும் சிதைக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் முந்தைய உருவமான ஜனசங்கம் ஆகியவை இந்திய அரசமைப்புச் சட்டம், இந்திய தேசிய கீதம், இந்திய தேசிய கொடி, இந்திய மொழிக்கொள்கை ஆகியவற்றை நிராகரித்தே வந்துள்ளன. இடைக்காலத்தில் இந்தி இறுதியாக சமஸ்கிருதம் என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் கோட்பாடு. ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தும் முயற்சியே அமித் ஷாவின் பேச்சு. அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் இருக்க வேண்டும். அந்த நிலை வரும்வரை இரு மொழிக் கொள்கை தான் இருக்கும், இந்தியை திணிக்க முடியாது. எம் மொழியையும் அவமதிக்கும் நோக்கம் நமக்கு இல்லை. ஆனால் ஒரு மொழியைத் தூக்கிப் பிடிப்பதற்காக அனைத்து மொழிகளையும் மிதிப்பதற்கு மத்திய அரசு முயற்சித்தால் அதற்கு இடமளிக்க மாட்டோம். மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், மத்திய பல்கலை கழகங்களில் நுழைவுத் தேர்வினை புகுத்தி, தனியார் பயிற்சி மைய வணிகத்தை ஊக்குவிப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
