பேராசிரியர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் திமுக..
சேலத்தில் நடைபெற்ற ராகுல் காந்தி கலந்து கொண்ட திமுக பொதுக்கூட்டத்திற்கு சென்ற ஜவாஹிருல்லா, மேடையிலிருந்து கீழே இறங்கும் போது கால் இடறி அதில் அவரது முழங்காலில் கடுமையான வலி ஏற்பட்டது.
பாபநாசம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் பேராசிரியர் ஜவாஹிருல்லா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுகவுடன் கூட்டணி அமைத்து மனிதநேய ஜனநாயக் கட்சியின் சார்பில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் பேராசிரியர் ஜவாஹிருல்லா. அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கோபிநாத், அமமுக சார்பில் ரெங்கசாமி, மக்கள் நீதி மையம் வேட்பாளர் சாந்தா உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பாபநாசம் தொகுதி நட்சத்திர வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அத்தொகுதியில் தங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று சேலத்தில் நடைபெற்ற ராகுல் காந்தி கலந்து கொண்ட திமுக பொதுக்கூட்டத்திற்கு சென்ற ஜவாஹிருல்லா, மேடையிலிருந்து கீழே இறங்கும் போது கால் இடறி அதில் அவரது முழங்காலில் கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து நள்ளிரவு தஞ்சாவூர் வந்த அவர், அங்கே மீனாட்சி மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்து கொண்டார். அப்போது அவருக்குப் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
இன்று காலை சிகிச்சை எடுக்க செல்வதாக கூறி புறப்பட்டார், இந்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எந்த மருத்துவமனை என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஏற்கனவே அவர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாபநாசம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்க செல்லவில்லை. அவரை ஆதரித்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் அப் பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.