50 லட்சம், 100 சவரன் பரிசு !! வெளிப்படையா அறிவித்தவர் வீடுகளில் ரெய்டு ! வாய்கொழுப்பால் சிக்கிய துரை முருகன் , அனிதா….
அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து 50 லட்சம் ரூபாயும் 100 சவரன் நகையும் தருவதாக வேலூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துரை முருகன் வெளிப்படையாக அறிவித்தது தான் தற்போது அவருக்கு பெரிய ஆப்பாக அமைந்துள்ளது என விவரம் அறிவிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலுாரில், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய திமுக பொருளாளார் துரைமுருகன், 'வேலுார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில், எந்த தொகுதியில், திமுகவினர் அதிக ஓட்டுகள் வாங்கி தருகின்றனரோ, அந்த நிர்வாகிகளுக்கு, 50 லட்சம் ரூபாய், என் தனிப்பட்ட பணத்தில் இருந்து தருகிறேன்' என்றார்.
இந்த பேச்சு தான், வருமான வரித்துறையினர், வேலுார் தொகுதி மீது, தனி கவனம் செலுத்த வழி ஏற்படுத்தி கொடுத்தது. தீவிர கண்காணிப்பில், இருந்த வருமான வரித்துறையினர், தங்களுக்கு கிடைத்த நம்பிக்கையான தகவலின் அடிப்படையில், மார்ச், 30ல் இரவு, 10:30 மணிக்கு, துரைமுருகன் வீட்டை சோதனையிட சென்றனர்.அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், திடீர் நாடகத்தை அரங்கேற்றினர்.
நான்கு மணி நேரம் காத்திருப்பது போல் நடித்த அதிகாரிகள், துரைமுருகன் வீடு, கல்லுாரியிலிருந்து, பணம் வெளியேற்றப்படுகிறதா என்பதை கண்காணித்தனர். பின், சோதனையை துவக்கி, 10.50 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்கள், மூன்று, 'பென் டிரைவ்' உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
பென்டிரைவில் இருந்த தகவல்களில், வாக்காளர் பட்டியலும், ரகசிய குறியீடுகளும் இருந்துள்ளன. அதை பார்த்த அதிகாரிகள், பணப் பட்டுவாடாவுக்கான ரகசிய குறியீடாக கருதி, தீவிர விசாரணையில் இறங்கினர்.
துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் சிலரை, தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலையடுத்து, பணம் இருக்கும் இடங்களை மோப்பம் பிடித்தனர்.மார்ச், 31, ஏப்., 1 வங்கிகள் விடுமுறை என்பதால், முன்கூட்டியே பணத்தை குவித்ததையறிந்து, சோதனைக்கு நாள் குறித்தனர்.
வெளிமாவட்ட வருமான வரித்துறையினர், மார்ச், 31 மாலை வேலுாருக்கு வந்து சேர்ந்தனர். ஏப்ரல் 1 ஆம் தேதி காலை, 3:00 மணிக்கு சோதனை துவக்க திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையே, வேலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலக பறக்கும்படையினர், காலி கவர் வேனை மடக்கிய போது, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, வருமான வரித்துறையினருக்கு, அவசர தகவல் சென்றது. உடனடியாக சோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, உத்தரவு பறந்தது
ஏற்கனவே, வேலுாரில் முகாமிட்டிருந்த, வெளிமாவட்ட வருமான வரித்துறையினருக்கு, உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது. இவர்கள், கலெக்டர் அலுவலக பறக்கும் படையினருடன் சேர்ந்து, சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை, 11 கோடியே 40 லட்சம் ரூபாய் கைப்பற்றியுள்ளனர்.
பணம் கைப்பற்றப்பட்டதை அறிந்த துரைமுருகன். இனி, அதிலிருந்து மீண்டு வரும் வழியை அவசரமாக தேடிக் கொண்டிருக்கிறார்.
இதே போல் தூத்துக்குடி தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனும் இதே போல் அதிக வாக்குகளை பெற்றுத்தரும் நிர்வாகிகளுக்கு பணமும், நகையும் பரிசாக அறிவித்தார். இதையடுத்து அனிதாவின் பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக துரை முருகனும், அனிதா ராதாகிருஷ்ணனும் தங்களது வாய்க் கொழுப்பால் சிக்கலில் மாட்டியுள்ளனர்.