சென்னை விக்னேஷ் கைதி மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌, கைதி விக்னேஷ்‌ மரணம்‌ மற்றும்‌ ஈரோடு, திருப்பூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ நடைபெற்ற குற்றச்‌ சம்பவங்கள்‌ தொடர்பாக எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ,” கைதி விக்னேஷ்‌ இறப்பு குறித்து “சந்தேக மரணம்‌” என முறைப்படி வழக்குப்‌ பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. விக்னேஷினுடைய உடல்‌ 20- 4- 2022 அன்று மேஜிஸ்ட்ரேட்‌ முன்னிலையில்‌, மருத்துவக்‌ குழுவினரால்‌ உடற்கூராய்வு செய்து, வீடியோ மூலம்‌ முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர்‌, அன்றைய தினமே உறவினர்களிடம்‌ முறைப்படி விக்னேஷினுடைய உடல்‌ ஒப்படைக்கப்பட்டது

மேலும்‌, இந்த வழக்கானது, சந்தேக மரண வழக்காகப்‌ பதிவு செய்யப்பட்டு, விசாரணையில்‌ உள்ள நிலையில்‌, தலைமைச்‌ செயலக காலனி காவல்‌ நிலைய உதவி ஆய்வாளர்‌ புகழும்‌ பெருமாள்‌, காவலர்‌ பொன்ராஜ்‌, ஊர்க்‌ காவல்‌ படைக்‌ காவலர்‌ தீபக்‌ ஆகியோர்‌ தற்காலிகப்‌ பணி நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி- க்கு மாற்றம்‌ செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருக்கிறார்‌.

மேலும் படிக்க: அண்ணாமலை தினமும் எதையாவது தூக்கிக் கொண்டுதான் இருக்கிறார்.. செம்மய்யா கிண்டல் அடித்த வைகோ.

ஆகவே, விக்னேஷ்‌ மரணம்‌ தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும்‌ முறையாக அரசு எடுத்து வருகிறது. 
தற்பொழுது கிடைத்துள்ள விக்னேஷ்‌ அவர்களின்‌ உடற்கூராய்வு முடிவுகளின்படி, அவருடைய உடலில்‌ 13 இடங்களில்‌ காயங்கள்‌ கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில்‌, இன்று இந்த வழக்கானது, கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள்‌ மீது கொலை வழக்குப்‌ பதியப்பட்டு, விசாரணையினைத்‌
தொடர்ந்து நடத்திட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதேபோல்‌, ஈரோடு மாவட்டம்‌, சென்னிமலை காவல்‌ நிலைய சரகம்‌, உப்பிலிபாளையம்‌ ஒடைக்காடு பகுதியில்‌ துரைசாமி மற்றும்‌ அவரது மனைவி ஜெயமணி ஆகியோர்‌ 30-4-2022 அன்று அவர்களது தோட்டத்து வீட்டின்‌ வெளிப்பகுதியில்‌ உறங்கிக்‌ கொண்டிருந்திருக்கிறார்கள்‌. அப்போது அடையாளம்‌ தெரியாத நபர்கள்‌ அந்த இருவரையும்‌ தாக்கிவிட்டு, அவர்கள்‌ அணிந்திருந்த தங்கநகைகளை திருடிச்‌ சென்றிருக்கிறார்கள்‌.

இச்சம்பவத்தில்‌, காயமுற்ற துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்‌, அவரது மனைவி ஜெயமணி பெருந்துறை அரசு மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருகிறார்‌. அதேபோன்று, திருப்பூர்‌ மாவட்டம்‌, காங்கேயம்‌ காவல்‌ நிலைய சரகம்‌,
தம்பிரெட்டிப்பாளையத்தில்‌ பழனிச்சாமி மற்றும்‌ அவரது மனைவி வள்ளியம்மாள்‌, சொந்தமான ரெட்டிப்பாளையத்தில்‌ உள்ள தோட்டத்து வீட்டில்‌ குடியிருந்து வருகின்றனர்‌. அவர்கள்‌ தங்களது வீட்டின்‌ வெளியே உறங்கிக்கொண்டிருந்த போது, அடையாளம்‌ தெரியாத நபர்கள்‌ அவர்களைத்‌ தாக்கி கொலை செய்து, வள்ளியம்மாள்‌ அணிந்திருந்த சுமார்‌ ஏழரை சவரன்‌ தங்க நகைகளை திருடிச்‌ சென்றிருக்கிறார்கள்‌.

இந்த இரண்டு சம்பவங்கள்‌ தொடர்பாக காவல்துறையினர்‌ வழக்குப்‌ பதிவு செய்து, இதற்கென தனிப்படைகள்‌ அமைக்கப்பட்டு இக்குற்றச்‌ செயல்களில்‌ ஈடுபட்டவர்களை அடையாளம்‌ கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு சம்பவங்கள்‌ குறித்த முதல்‌ கட்ட விசாரணையில்‌, தாக்குதல்‌ நடந்த விதம்‌ மற்றும்‌ கொள்ளையடிக்கப்பட்ட முறை ஒன்றுபோல்‌ இருப்பதால்‌, இந்த இரண்டு சம்பவங்களில்‌ ஒரே குற்றக்‌ கும்பல்‌ ஈடுபட்டிருக்கலாம்‌ என்றும்‌ தெரிய வருகிறது. இதுகுறித்து கோயம்புத்தூர்‌ சரக காவல்துறை துணைத்‌ தலைவர்‌ தலைமையிலே, காவல்‌ துறையினர்‌ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌. விரைவில்‌ குற்றவாளிகள்‌ கைது செய்யப்படுவார்கள்‌.

இதுபோன்ற குற்றச்‌ சம்பவங்களைப்‌ பொறுத்தவரையில்‌, காவல்‌ துறையின்‌ சார்பில்‌ அனைத்து முயற்சிகளும்‌ மேற்கொள்ளப்பட்டும்‌, ஒருசில குற்றச்‌ சம்பவங்களில்‌ ஈடுபட்டவர்களைக்‌ கண்டுபிடிக்க இயலாத நிலை கடந்த காலங்களிலும்‌ இருந்துள்ளது. இருந்தாலும்‌, இதுகுறித்து காவல்‌ துறை விசாரணை நடைபெற்று வருவதால்‌, இதற்கு மேல்‌ இதுபற்றிப்‌ பேசி, நான்‌ அரசியலாக்க விரும்பவில்லை. ஆகவே, உரிய நடவடிக்கை நிச்சயமாக, விரைவில்‌ எடுக்கப்படும்‌ என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: அகதி பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. சுவர் ஏறி குதித்து ஓடிய போலீஸ்.. சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.