Prior to Pongal Rs. 750 crore would be given to the transport pensioners

பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி வழங்கப்படும் எனவும் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். நேற்று குடும்பத்தினருடன் போக்குவரத்துதுறை அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள், இன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 7 நாட்களாக நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் போக்குவரத்து முடங்கியுள்ளது. 

பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நிலைமையை சமாளிக்க அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து அரசுப் பேருந்துகளை இயக்கி வருகிறது.

அரசு, தொழிற்சங்கங்கள் என இரு தரப்பினரும் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி வழங்கப்படும் எனவும் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.