தமிழ்நாட்டில் பிரதமர் மோடி திறந்துவைத்த, அடிக்கல் நாட்டிய திட்டங்களின் விவரம்
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் திறந்துவைத்த மற்றும் அடிக்கல் நாட்டிய திட்டங்களின் விவரங்களை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை திறந்துவைத்து, சில திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டுவதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் விழாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த மற்றும் அடிக்கல் நாட்டிய திட்டங்கள்:
அர்ஜூன் மாக் 1ஏ டாங்கியை இந்திய ராணுவத்திற்கு சமர்ப்பித்தார். CVRDE, DRDO, 15 கல்வி நிறுவனங்கள், 8 லேப்கள் மற்றும் பல சிறு குறு தொழில் நிறுவனங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டவை.
ரூ.3,770 கோடியில் 9.05 கிமீ தொலைவிற்கு சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பயணத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.
சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையே 22.1 கிமீ தொலைவிற்கு ரூ.293.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்துவைத்தார்.
விழுப்புரம் - கடலூர் - மயிலாடுதுறை - தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர் இடையேயான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தொடங்கிவைத்தார்.
கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த திட்டம் டெல்டா மாவட்ட பாசனத்திற்கு உதவும். ரூ.2,640 கோடி மதிப்பில் இந்த திட்டம் 2.27 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசனத்தை ஏற்படுத்தும்.
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி வளாகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.