ஜிஎஸ்டி தான் மட்டும் எடுத்த முடிவல்ல… ஜகா வாங்கும் பிரதமர் நரேந்திர மோடி !!!
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் முடிவை தான் மட்டும் தனியாக எடுத்த முடிவல்ல என்றும், பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன என்றும், இதனால் இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு பாஜகவுக்கு பின்னடைவைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம், காந்திநகரில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும் என்ற முடிவை, பிரதமர் என்ற முறையில் தான் மட்டும் தனியாக எடுக்கவில்லை என்றும், . 30-க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்புடன் ஆலோசனை நடத்திதான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது என தெரிவித்தார்.
ஜிஎஸ்டி குறித்து தேவையற்ற பொய் பிரசாரத்தை காங்கிரஸ் மேற்கொள்ளக் கூடாது என்றும், இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் காங்கிரஸ் கட்சிக்கும் சமபங்கு உண்டு என்றும் கூறினார்.
.ஜிஎஸ்டி-யின் முக்கிய அம்சங்களை வடிவமைத்தலில் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. ஜிஎஸ்டி குறித்து எழும் கருத்துகளை கவனமாக ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப மாற்றங்களையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி தன்னிச்சையாக மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடிவடிக்கை, ஜிஎஸ்டி அமல் போன்ற நடவடிக்கைகளால்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளதற்கு பதிலளிக்கும் வகையில்தான் மோடி தனது கருத்தை தெரிவித்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த திட்டத்திற்கும் உரிமை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் தோல்வி அடைந்துவிட்டதால், அதிலிருந்து தப்பிக்க இவ்வாறு பேசுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.