மோடியின் கண்ணீர் வடிக்கும் பேச்சு அவருக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை எடுத்துரைத்துள்ளது. ஒரு பிரதமராக அவர் இந்தியாவை வளரச் செய்வாரே தவிர, தம் நாடு தத்தளிக்க வேண்டும் என நினைப்பாரா? 

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் பற்றி பேசும்போது பிரதமர் மோடி தன்னை அறியாமல் கண்கலங்கி உருகியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உத்தரப்பிரதேசம், வாரணாசி தொகுதியில் இருந்து நரேந்திர மோடி கடந்த இரு மக்களவை தேர்தல்களில் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் உள்ள மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது மோடி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. ’’பல முனைகளில் இருந்தும் நோய்த்தொற்று தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. நாம் அதை எதிர்கொண்டு வருகிறோம். கொரோனா இறப்பு விகிதம் இரண்டாவது அலை தாக்கத்தின் போது மிக அதிகமாக இருக்கிறது. நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலகட்டமும் அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் அன்புக்கு உரியவர்கள் பலரை நம்மிடமிருந்து பறித்து சென்று விட்டது. அவர்களுக்கு எனது இதயபூர்வமான அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். இழப்புகளை சந்தித்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன்’’என அவர் பேசிக் கொண்டு இருக்கும்போதே சில நிமிடங்கள் பேசுவதை நிறுத்தி விட்டு மௌனம் காத்தார். அவரது கண்கள் கலங்கின. வார்த்தைகள் வராமல் தடுமாறினார். பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தனது பேச்சைச் தொடர்ந்தார் மோடி. 

இப்போதைய கொரோனா தொற்று இந்தியாவில் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்தியாவெங்கும் மரண ஓலம். தடுப்பூசி பற்றாக்குறை. படுக்கை வசதி இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை. இவற்றுக்கெல்லாம் காரணம் பிரதமர் மோடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நிலைமை கையை மீறிச்செல்ல தடுப்பூசிகளை ஆரம்ப கால கட்டத்தில் மோடி மேலைநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டார். உலக நாடுகளிடம் நற்பெயர் எடுக்க நினைத்து இந்தியாவை சுடுகாடாக்கி விட்டார் என்றெல்லாம் பேச்சுக்கள் ஒளித்துக் கொண்டு இருக்கின்றன. 

இந்நிலையில் மோடியின் கண்ணீர் வடிக்கும் பேச்சு அவருக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை எடுத்துரைத்துள்ளது. ஒரு பிரதமராக அவர் இந்தியாவை வளரச் செய்வாரே தவிர, தம் நாடு தத்தளிக்க வேண்டும் என நினைப்பாரா? என்று அவரது அனுதாபிகள் இந்தப்பேச்சை உணர்ச்சிகரமாக பகிர்ந்து வருகின்றனர்.