பிரதமர் மோடி `ஊமைச் சாமியாராக' தொடர்ந்து நீடிக்க முடியாது காங்கிரஸ் கடும் தாக்கு
பிரதமர் மோடி `ஊமைச் சாமியாராக' தொடர்ந்து நீடிக்க முடியாது
காங்கிரஸ் கடும் தாக்கு
மகாராஷ்டிரா மாநில வகுப்புக் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனி பாபாவாக தொடர்ந்து நீடிக்க முடியாது என காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது.
தலித் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் தலித் அமைப்பினர் பீமா கொரேகான் போரின் 200-வது ஆண்டு நினைவு தினத்தை 2 நாளுக்கு முன்னர் கொண்டாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் தலித் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பெரும் வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பாக நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
ஆனால் இந்த கலவரம் குறித்து பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மோடி மவுனி பாபா
பா.ஜ.க. ஆளும் மகாராஷ்ரா மாநிலத்தில் தலித் மக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன.
இச்சம்பவம் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர், நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கருத்து எதுவும் கூறாமல் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என கூறினார்.
பிரதமர் மோடியின் இந்த மவுனம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காட்ட முடியாது என்றும், இது போன்ற பிரச்சினைகளில் பிரதமர் மோடி மவுனி பாபாவாக இருக்கிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
பா.ஜ.க. எதிர்விமர்சனம்
இது குறித்து பா.ஜ.க. சார்பில் கருத்து தெரிவித்த அனந்த் குமார், மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் வகுப்புவாத பதற்றத்திற்கு தூபமிட்டு வருகிறது என குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.