பிரதமர் மோடியும் அமித் ஷாவும் இந்துக்களே அல்ல - பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு
பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் இந்துக்களே கிடையாது என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்திய பாஜக அரசையும் மத்திய அரசின் செயல்பாடுகளையும் பிரகாஷ் ராஜ் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். அதனால் பாஜகவினரின் எதிர்ப்புகளையும் சந்தித்துவருகிறார். கௌரி லங்கேஷ் கொலை, மாட்டிறைச்சி தடை, பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் பிரகாஷ் ராஜ் விமர்சித்திருந்தார். பிரகாஷ் ராஜுக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வந்தனர்.
அண்மையில் கர்நாடக மாநிலம் சிர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்தார். பிரகாஷ் ராஜ் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பிரகாஷ் ராஜ் பேசிய விழா மேடையை பசுவின் சீறுநீரான கோமியத்தால் கழுவி சுத்தம் செய்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்த பிரகாஷ் ராஜ், சிர்சி நகரில் நான் பங்கேற்ற விழா மேடையை, கோமியத்தை தெளித்து பாஜக தொண்டர்கள் சுத்தம் செய்துள்ளனர். நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் நீங்கள் தொடர்ந்து இந்த சுத்திகரிப்பு மற்றும் புனிதப் பணியில் ஈடுபடவேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் நடந்த விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ், இந்துக்கள் யார் என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது. பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் இந்துக்களே கிடையாது. நான் பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் ஹெக்டேவுக்கும் எதிரானவனே தவிர இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல என பிரகாஷ் ராஜ் பேசினார்.
பிரகாஷ் ராஜின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரகாஷ் ராஜூவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான மோதல் வலுத்துக்கொண்டே இருக்கிறது.