பாவம் விஜயகாந்த்.. தேமுதிகவை ஆழமாக குழி தோண்டி புதைத்த பிரேமலதா.. கதை ஓவர்.??
மைத்துனர், மனைவி, மகன் என கட்சியில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பலர் கட்சியை விட்டு அடுத்தடுத்து வெளியேறியதால் ஒரு கட்டத்தில் கட்சி கலகலத்து விட்டது.
விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்துள்ளார். அவரது இந்த படுதோல்வி ஏற்கனவே மன உளைச்சலில் உள்ள தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக திமுகவுக்கு தான்தான் மாற்று என கட்சி தொடங்கியவர் கேப்டன் விஜயகாந்த் . ஆனால் சந்தர்ப்ப சூழல் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்த அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்தார் அவர். குறிப்பாக வட மாவட்டங்கள் தேமுதிகவின் செல்வாக்கு நிறைந்த பகுதியாக இருந்து வந்தது. ஆனால் கடந்த தேர்தல்களில் அவர் எடுத்த தவறான முடிவுகளால் மக்கள் மத்தியில் தேமுதிகவின் மீது அதிருப்தி எழத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு தேமுதிகவை வீழ்ச்சியை நோக்கி தள்ளியது.
மைத்துனர், மனைவி, மகன் என கட்சியில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பலர் கட்சியை விட்டு அடுத்தடுத்து வெளியேறியதால் ஒரு கட்டத்தில் கட்சி கலகலத்து விட்டது. பாஜகவுடன் அதிக நெருக்கம், அதிமுக கொண்டு வரும் திட்டங்களை கண் மூடிக்கொண்டு ஆதரிப்பது என தேமுதிகவின் செயல்பாடுகளால் அக்கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என கூறி வெளியேறிய தேமுதிகா, அவசர கோலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது, அதில் விஜயகாந்த் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதியான விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் அம்முக அதரவுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா களமிறங்கினார்.
அதிமுக கூட்டணியில் அதரவுடன் பாமக வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை எதிர்கொண்டார், மேலும் 29 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது, வாக்கு எண்ண துவங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார், பாமக வேட்பாளர் 2வது இடத்திலும் இருந்து வந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர் ராதாகிருஷ்ணன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ஆனால் தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே பின்தங்கியிருந்த பிரேமலதா விஜயகாந்த் மொத்தம் 25 ஆயிரத்து 908 வாக்குகள் மட்டுமே பெற்று பரிதாகத்திற்குரிய நிலையில் இருந்தார். விருதாச்சலத்தில் மொத்தம் பதிவான 1லட்சத்து 94 ஆயிரத்து 723 வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கு பெற்றால் டெபாசிட் பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பார்.
அதற்காக பிரேமலதா விஜயகாந்த் 32 ஆயிரத்து 788 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும், ஆனால் அவர் 25 ஆயிரத்து 908 வாக்குகள் மட்டுமே பெற்றதால் அவர் டெபாசிட் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்.தேமுதிக கடந்த காலங்களில் எடுத்த தவறான முடிவுகளால், அக்காட்சி தலைமையின் மீது கட்சித் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் பிரேமலதா விஜயகாந்த், விருதாச்சலத்தில் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலோடு தேமுதிகவின் கதை முடிகிறது என பல கட்சிகள் ஆருடம் கூறி வந்த நிலையில் அது உண்மையாகி விட்டதே என தேமுதிகவினர் குமுறத்தொடங்கியுள்ளனர்.