கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் லலித திரிபுர சுந்தர யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் பெற வேண்டும் அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். 

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் மேண்சோறு சாப்பிட்டும், அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் சார்பில் இன்று காலை லலித திரிபுர சுந்தர யாகம் நடத்தப்பட்டது. அப்போது சகஸர நாமம் சொல்லி அதிமுகவினர் வழிபாடு செய்தனர். 

இன்று நடத்தப்பட்ட லலித திரிபுர சுந்தர யாகம் நடத்துவதன் மூலம் எதிரிகளை வீழ்ச்சியடைய செய்யவும், மனதில் ஏற்பட்டுள்ள கஷ்டங்களைப் போக்கவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் பூரண உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று இந்த யாகத்தை நடத்தியதாக சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் கூறினார்.

இன்று நடத்தப்பட்ட இந்த யாகத்தில் அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி., அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.