Ponmudi and J.anbazhagan fight in front of stalin
சமீபத்தில் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. எப்போதுமே ஸ்டாலினை வாழ்த்தி பேசும் கையோடு அமைதியாகிவிடும் மா.செ.க்கள் அன்று மனம் திறந்து பல பிரச்னைகளை ஸ்டாலின் முன்னிலையில் பகிர்ந்திருந்தார்கள்.
குறிப்பாக ’நீங்கள் எந்த மாவட்டத்துக்கு சுற்றுப் பயணம் சென்றாலும் ஒரு குறிப்பிட்ட டீம்தான் உங்களை சுற்றி நிற்கிறது. அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கும் உங்களை நெருங்கி நிற்கும் வாய்ப்பை கொடுங்கள்.’ என்று சொல்லியிருந்தார்கள்.

மாவட்ட செயலாளர்களின் இந்த குத்தல் மிக குறிப்பாக துரைமுருகனை நோக்கித்தான் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்க உரை கொடுத்தார்கள். மேலும் பொன்முடி, எ.வ.வேலு போன்றோரும் துரைமுருகனுக்கு அடுத்த இடத்தில் மற்ற நிர்வாகிகளின் ஆதங்க டார்கெட்டில் இருக்கிறார்கள் என்று கோடிட்டுக் காட்டினார்கள்.

இந்நிலையில் இன்று அந்த விவகாரம் வெளிப்படையாகவே வெடித்துள்ளது. இன்று சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்த ஸ்டாலின் மீடியாவை சந்திக்க நெருங்க, அவருக்கு முன்னதாகவே அந்த இடத்தை ஆக்கிரமித்து நின்றார் துரைமுருகன். அவரை ஒட்டி வந்து நின்ற ஸ்டாலின் அவரை சற்று தள்ளி நிற்க வைத்துவிட்டு பேச்சை துவக்கினார். இந்நிலையில் ஸ்டாலினிடம் ஒரு பிரச்னையை சுட்டிக் காட்டினார் துரை. அதாவது ஸ்டாலினின் இடது பக்கம் ஒட்டிக் கொள்வதற்கு வழக்கம்போல் பொன்முடி வந்து நின்றார். இந்த நேரத்தில் அந்த இடத்துக்கு ஜெ.அன்பழகன் வர முயன்றார்.

இதில் பொன்முடிக்கும், அன்பழகனுக்கும் இடையில் வாக்குவாதம் வந்துவிட்டது. அன்பழகன் எகிற துவங்க, பொது இடத்தில், மீடியா முன்னிலையில் மானம் போகிறதே என்கிற வருத்தத்தில் ஸ்டாலின் அவரை சமாதானம் படுத்த முயன்று கையை பிடித்து அமுக்க அவரோ ஸ்டாலின் கையை உதறிவிட்டு பொன்முடியுடன் சண்டை போடுவதிலேயே குறியாய் இருந்தார்.
‘வழக்கம் போல நீங்களே நில்லுங்க சார், நாங்க போறோம்.’ என்றபடி அன்பழகன் வெறுப்பாய் கத்த, பொன்முடி பதிலுக்கு ஏதோ சொல்லி ‘ஏன் கத்துறீங்க’ என்று கேட்க, ஜெ. அன்பழகனோ ‘கத்தாதீங்கன்னா பிறகு வேறென்ன செய்யுறது?’ என்றபடி பொன்முடியை தள்ளிவிட்டு ஸ்டாலினோடு இணைந்து நின்றார்.
ஸ்டாலினை சுற்றி நிற்பவர்கள் யார்? என்பதில் இது வரை இலைமறை காயாக இருந்த மோதல் இன்று வெளிப்படையாகவே வெடித்துவிட்டது.
ஸ்டாலின் உடனடியாக இந்த பிரச்னையை சரி செய்து, நீண்டகாலமாக தனது அதிகார நிழலாய் இருப்பவர்களை தள்ளி நிற்க வைத்துவிட்டு, எல்லோருக்கும் சம உரிமை வழங்காவிட்டால் இந்த பிரச்னை மிக மோசமாக பொது இடத்தில் தி.மு.க.வை அசிங்கப்படுத்த தயங்காது என்பது உறுதி!
