தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 2.15 கோடி குடும்பங்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 2009-ஆம் ஆண்டு முதலே ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்போடு 2500 ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பத்து ஆண்டுகள் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

இதன்படி சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் பொங்கல் பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால், இதில் கரும்பு விடுபட்டதால், கரும்பு விவசாயிகள் வருத்தமடைந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கரும்பும் அதில் சேர்க்கப்பட்டது. எனவே, மொத்தம் 21 பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் ஜனவரி 3-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.