pon rathakirushnan speech about anitha death

நாட்டின் எதிர்காலமாக திகழும் குழந்தை செல்வங்கள் துணிவுடன் எதிர்காலத்தை அணுக வேண்டும் எனவும் அனிதாவை இழந்து வாடும் அவரது பெற்றோர்கள் மன ஆறுதல் பெற இறைவனை வேண்டுகிறேன் எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். 

இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. 

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடல் அஞ்சலிக்காக குழுமூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே மாணவர்கள் அமைப்பினர் எதிர்கட்சியினர் என பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய மாநில அரசுகளே அனிதாவின் மரணத்திற்கு காரணம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அனிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். 

மேலும் நாட்டின் எதிர்காலமாக திகழும் குழந்தை செல்வங்கள் துணிவுடன் எதிர்காலத்தை அணுக வேண்டும் எனவும் அனிதாவை இழந்து வாடும் அவரது பெற்றோர்கள் மன ஆறுதல் பெற இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.