pon radhakrishnan emphasis opposition parties
ஓகி புயலால் மாயமான மீனவர்களை கப்பற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். எனவே மீனவர்கள் மாயமான விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கரை திரும்பவில்லை. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களை மீட்டு கொண்டுவரும் பணிகளும் நடந்துவருகின்றன.
இந்நிலையில், இறந்த மீனவர்கள் மற்றும் புயலால் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
புயலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களை பார்வையிட்டேன். மீனவர்கள் சிலர் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் கரை ஒதுங்கியிருக்கும் தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் திரும்பிவருவதற்கு டீசல் படகு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டீசலும் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசோ மாநில அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல் பரப்பப்படுகிறது. மீனவர்களை தேடி மீட்கும் பணியில் கப்பற்படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தேடும் பணியில் கப்பற்படையுடன் மீனவர்களும் இணைந்து செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த மீனவர்ளுக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வாழை, தென்னை, ரப்பர் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் முறையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் இதைவைத்து அரசியல் செய்ய வேண்டாம் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
