வருமான வரித்துறை சோதனைக்குட்படுத்தப்பட்டு தலைமைச் செயலாளர் பதவியை இழந்தவர் ராம மோகன ராவ். இவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, கடந்த ஐந்தரை ஆண்டுகளாக ஜெயலலிதாவிடம் நிர்வாகத்தைக் கற்றுக் கொண்டேன் என்றும், அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செயல்படுத்துவேன் என்றும் குறிப்பிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற ஒரு வருமான வரித்துறை சோதனை நடத்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பினார். இப்படி தன் மீதுள்ள குற்றச்சாட்டை மறுக்கும் விதத்தில் ராம மோகன ராவ் பேசியது ஜெயலலிதாவின் புகழை குலைக்கும் விதமாக அமைந்திருந்தது என பொதுவான கருத்து நிலவி வருகிறது. அவர் ஜெயலலிதாவை கேடயமாக பயன்படுத்தியது போன்றும் இருந்ததாக வலைதளங்களில் பதிவுகள் காணப்பட்டன.

இந்நிலையில் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் , முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவின் பேச்சு ஜெயலலிதாவின் பெயருக்கும் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக இருந்தது என குற்றம் சாட்டினார்.

பொது மக்களிடையே புகழ் பெற்றுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை ராம மோகன ராவ் தவறாக பயன்படுத்துகிறார் என்றும் அதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ஆவேசமாக கூறினார்.