policemen cheating in name of divakaran

சசிகலாவும், தினகரனும் சிறைக்கு சென்று விட்டனர். இன்னும் தமக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றாலும், அனைத்தும் தாமாக இருக்கும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறார் திவாகரன்.

அதிமுக எம்.எல்.ஏ க்கள் தொடங்கி அமைச்சர்கள் வரை அவரது வீட்டுக்கு படை எடுப்பதால், திவாகரனின் வீடு வி.ஐ.பிக்களால் நிரம்பி வழிகிறது.

மறுபக்கம், அவர் பெயரை சொல்லி, காக்கிகள் இடை விடாமல் கல்லா கட்டுவதும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

2011 ம் ஆண்டு சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அரசியலை விட்டு நீக்கிய ஜெயலலிதா, அவரது உறவுகள் பலபேர் மீது வழக்குகள் போட்டு போலீசாரை விட்டு செமையாக கவனிக்க வைத்தார்.

அந்த சமயத்தில், கொலை முயற்சி, கொலை வழக்கு, நில அபகரிப்பு அபகரிப்பு என பல்வேறு வழக்குகளுக்கு ஆளான திவாகரன் திருச்சி மத்திய சிறையில் 90 நாட்களுக்கு மேல் அடைக்கப்பட்டார்.

அவர் சிறையில் இருந்தபோது, அவருக்கு உணவு, பழங்கள், செல்போன் என பல வசதிகளை செய்து கொடுத்து, நெருக்கமான காவல்துறையினர் சிலர், அவர் விடுதலையான பிறகு, பல்வேறு பதவி உயர்வுகளை பெற்று விட்டனர்.

தற்போது, தினகரனும், சசிகலாவும் சிறையில் இருப்பதால், கட்சியிலும், ஆட்சியிலும் திவாகரனின் கொடியே பறக்கிறது. இதை பயன்படுத்தி, பணி மாறுதல் மற்றும் பணி உயர்வு பெற்று கொடுத்தும், இடை நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணி அமர்த்தியும் காக்கி சட்டைகள் கன ஜோராக கல்லா கட்டி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜெயிலர், துணை ஜெயிலர் பதவிகளில் இருப்பவர்கள், தினகரன் ஆசியுடன் மற்ற மாவட்டங்களில் இருந்து மீண்டும் டெல்டா மாவட்டங்களுக்கே பணி மாறுதல் பெற்று வந்துள்ளனர்

இதில் சில முக்கிய அதிகாரிகள், திவாகரன் பிறந்த நாளன்று அவரது வீட்டுக்கு சென்று, மலர் கிரீடம் வைத்து, பொன்னாடை போர்த்தி குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

அந்த படத்தை காட்டி, நாங்கள் திவாகரனுக்கு வேண்டியவர்கள் என்று கூறி, வசூல் வேட்டை நடத்தி வருவதுடன், உயர் அதிகாரிகளையும் மதிக்காமல் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆடும் வரை ஆடுங்கள், உங்கள் ஆட்டத்தை டெல்லியில் இருந்து சில கண்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. அது நெருங்கி வரும்போது, அவர்களுக்கு தேவையான தகவல்களை நாங்களே கொடுத்து, உங்களுக்கு ஆப்பு வைக்கிறோம் என்று நேர்மையான காவல்துறை அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.