police protection strengthen in chepauk stadium

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழர்கள் பல்வேறு பிரச்னைகளுக்காக போராடி கொண்டிருக்கும் வேளையில், ஐபிஎல் கொண்டாட்டம் கூடாது. சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என்ற குரல் வலுத்துவருகிறது. அப்படி போட்டி நடத்தப்பட்டால், ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன. இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சென்னை வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீமான், திரைத்துறையினர், சில அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் என பல தரப்பினரும் ஐபிஎல்லை புறக்கணிக்க வலியுறுத்திவருகின்றனர். மீறி போட்டி நடத்தப்பட்டால், மைதானம் முற்றுகை, மைதானத்துக்குள் போராட்டம் ஆகியவற்றை நடத்த உள்ளதாகவும் கூறினர்.

ஆனால், திட்டமிட்டபடி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தே தீரும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார். இதுவரை இல்லாத அளவிற்கு ஐபிஎல் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

பை, செல்போன், லேப்டாப், பேனர், கறுப்பு துணி, தண்ணீர் பாட்டில்கள், உணவுகள், குளிர்பானங்கள், இசைக்கருவிகள் என எதுவும் எடுத்து செல்ல கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அண்ணா சாலையில் இருந்து மெரீனா கடற்கரைக்கு செல்லும் வாலாஜா சாலை, பாரதியார் சாலை உள்ளிட்ட சாலைகளை மூடப்பட்டுள்ளன. போட்டியின்போது எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடாமல் தடுக்க 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 

வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.