வேட்புமனு தாக்கலிலேயே வெடி வைத்த தினகரன்..! தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு..!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தினகரன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள், சுயேட்சையாக களமிறங்கும் தினகரன் உட்பட 21 பேர் நேற்றுவரை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், தினகரன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின்போது, தேர்தல் விதிகளை மீறி 100க்கும் அதிகமானோருடன், தினகரன் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, வெளியூரில் இருந்து 100க்கும் அதிகமானோரை வரவழைத்து, தேர்தல் விதிகளை மீறி தினகரன் கூட்டம் காட்டியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தினகரன், வெற்றிவேல் உள்ளிட்ட 20 பேர் மீது தேர்தல் கண்காணிப்பாளர், தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தினகரன், வெற்றிவேல் உள்ளிட்ட 20 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.