அதிமுக தலைமை அலுவலக்த்தில் தகராறு செய்யும் வகையில் அத்துமீறி நுழைந்ததாக சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஷ்வர திலகர் உட்பட பத்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இதையொட்டி தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார். சசிகலா புஷ்பா ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் , ஜெயலலிதாவுக்கு எதிராக பேசி வந்தார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பா இன்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அதிமுக தொண்டர்களும் , கட்சி நிர்வாகிகளும் குவிந்தனர்.
சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் சூழ மனுத்தாக்கல் செய்ய கட்சி அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்த அவரை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சூழ்ந்து தாக்க முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து காக்க முயன்றனர். இதில் லிங்கேஸ்வர திலகருக்கு சராமாரியாக அடி விழுந்தது. அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர் போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மைலாப்பூர் காஅவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார்.
அத்துமீறி ஆட்களுடன் வந்து தாக்க முயன்றதாக சிந்து ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இதையடுத்து ராயபேட்டை போலீசார் லிங்கேஸ்வர திலகர் உட்பட 10 பேர் மீது பிரிவு , ஐபிசி 144 , 448 ,323, 327 , 506(2) வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் அவர்கள் சிறையில் அடைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
