திருமாவளவனைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்... சிதம்பரத்தில் குஷ்பு பங்கேற்கும் போராட்டத்துக்கு அதிரடி தடை..!
விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் நடிகை குஷ்பு பங்கேற்க உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
மனுதர்மத்தில் பெண்களை பற்றி இழிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் யூடியூபில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். ஆனால், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்து பெண்களை திருமாவளவன் இழிவாக பேசிவிட்டதாக கடும் எதிர்ப்புகள் தெரிவித்துவருகின்றன. பாஜக தலைவர்கள் திருமாவளவனுக்கு எதிராகக் கொந்தளித்துவருகிறார்கள். இந்த விவகாரத்தில் திருமாவளாவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தில் திருமாவளவனைக் கண்டித்து நாளை போராட்டம் நடக்க உள்ளது. திருமாவளவன் எம்.பி.யாக இருக்கும் சிதம்பரம் தொகுதியிலும் பாஜக சார்பில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் பாஜக மகளிரணி சார்பில் நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிதம்பரம் காவல் துறை தடை விதித்துள்ளது.
திருமாவளவன் எம்.பி-யாக உள்ள சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் போலீஸார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.