அரக்கோணம் மாவட்டம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (34). எண்ணெய் வியாபாரி. இவரது மனைவி கோமதி (28). நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு மருத்துவ பரிசோதனையின்போது, கடந்த 13-ம் தேதி பிரசவத்திற்கு நாள் குறித்து கொடுத்துள்ளனர். ஆனால் அன்று கோமதிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த 18ம் தேதி கோமதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு தானே பிரசவம் பார்க்க முடிவு செய்த லோகநாதன் தனது அக்காள் கீதாவின் உதவியுடன் யூடியூப் சேனலை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில், கோமதிக்கு குழந்தை இறந்து பிறந்தது. அதிக ரத்த போக்கால் கோமதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமானது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- அரக்கோணம் மாவட்டம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய விஷயமாகும். யூடியூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது. நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. 108 தொலைபேசியில் அழைத்தால் அவசர ஊர்தியில் வீட்டுக்கே வந்து பெண்ணை அழைத்துச் சென்று மகப்பேறு பார்த்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வசதியை நான் மத்திய அமைச்சராக இருந்த போதே ஏற்படுத்தியுள்ளேன்.

மருத்துவமனையில் மகப்பேறு பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு வேறு பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மருத்துவர்களால் செய்யப்படும் மகப்பேறு தான் பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும். யூடியூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
