முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த போயஸ் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சினிமா துறையில் இருந்தபோது, தனது பரம்பரை இடத்தை, தனது உழைப்பால் வந்த பணத்தில் பார்த்து பார்த்து கட்டிய இல்லம் போயஸ் கார்டனில் உள்ளது.

திரைத்துறையில் இருந்த காலம் முதல் அரசியிலில் ஈடுபட்டு முதலமைச்சராக பதவி வகித்த காலம் வரை ஜெயலலிதா போயஸ் இல்லாத்திலேயே வசித்து வந்தார். தமிழக அரசியலில் மையப் புள்ளியான கோபாலபுரம், போயஸ் தோட்டம் இரண்டுமே தேனாம்பேட்டையில் அமைந்துள்ளது.

தமிழக அரசியலில் முக்கிய முடிவுகள், தோல்விகள், எதிர்ப்புகள், வெற்றி ஆரவாரங்கள் , தோல்வியின் மவுனம், தொண்டர்களின் உற்சாகம், கடைசியாக ஜெயல்லிதாவின் இறுதி ஊர்வலம் என அனைத்தையும் சந்தித்தது இந்த போயஸ் இல்லம்.

திரைத்துறை காலம் முதல் அரசியல் துறையில் ஈடுபட்டது வரை ஜெயலலிதாவின் பல நினைவுகள், அந்தந்த காலம் தொடர்பான பதிவுகள் போயஸ் இல்லத்தில் உள்ளன.

ஜெயலலிதா, ஒரு புத்தக பிரியர். அவருக்கென் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பெரிய அளவிலான நூலகமும் அங்கு உள்ளது. கலைத்துறை மற்றும் அரசியல் துறையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள், கேடயங்கள், நினைவு பொருட்கள் ஆகியவை போயஸ் இல்லத்தில் உள்ளன.

ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள், வாகனங்கள் போயஸ் தோட்டத்தில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், போயஸ் இல்லத்தை உரிமை கொண்டாடி வருகிறார் அவரது அண்ணன் மகள் தீபா. தற்போது, போயஸ் இல்லத்தில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வசிக்கின்றனர்.

சமீபத்தில் பேட்டி அளித்த முன்னாள் சபா நாயகர் பி.எச்.பாண்டியன், போயஸ் இல்லம், ஜெயலலிதா வாழ்ந்த கோயில். அது அவரை விரும்பும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள்,கோடிக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும். அதில் ஜெயலலிதா பெற்ற நினைவு பரிசுகள், பயன்படுத்திய பொருட்கள், வாகனங்கள் காட்சி பொருளாக வைக்க வேண்டும்.

எம்ஜிஆர் இல்லம், எப்படி நினைவு இல்லமாக பராமரிக்கப்படுகிறதோ, அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த, வசித்த போயஸ் இல்லத்தை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இதனை உத்தரவாக பிறப்பிக்க வேண்டும் என கவர்னரிடம் மனுவும் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று, ஓ.பி.எஸ். இன்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். முதல் கையெழுத்தாக தனது கையெழுத்தை அவர் போட்டார்.