"உலக்கை நாயகனா? உலகம் சுற்றும் வாலிபனா?" - நமது எம்.ஜி.ஆரில் கமலை விமர்சித்து கவிதை!
மஞ்சள் துண்டின் தயவில் மக்கள் திலகத்தை வசைபாடி திரியும் கமல், மு.க.வை மகிழ்விக்க முன்னோட்டம் பார்க்கிறாரா? என்று நடிகர் கமல் ஹாசனை விமர்சித்து நமது எம்.ஜி.ஆரில் கவிதை எழுதப்பட்டுள்ளது.
நடிகர் கமல் ஹாசன் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் தேசிய தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் கமல் ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல் கமலின் பேச்சுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.
நடிகர் கமலை, தமிழக அமைச்சர்கள் விமர்சனம் செய்வதோடல்லாமல், அதிமுக நாளேடான நமது எம்.ஜி.ஆர். இதழிலும் அவரை விமர்சித்து கவிதைகள் எழுதப்படடு வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் நமது எம்.ஜி.ஆர். இதழில், கமல் ஹாசன் குறித்து சகலகலா சண்டாளனே என்ற பெயரில் விமர்சனம்செய்து எழுதப்பட்டிருந்தது.
அதேபோல், உலக்கை நாயகனா? உலகம் சுற்றும் வாலிபனா? என்ற தலைப்பிலும் கவிதை வடிவில் கமலை விமர்சித்து எழுதப்பட்டுள்ளது.
வழி சொல்லத் தெரியாதவனுக்கு, பழி சொல்ல மட்டுமே தெரியும் என்பதற்கு கமல் பொருத்தமாகிறார் என்று அந்த கவிதை தொடங்குகிறது.
உன்னால் முடியும் தம்பி என்று படத்தில் வாயசைத்துப் பாடினார் கமல். ஆனால், இளையோர் கரத்தில் மடிக்கணினி கொடுத்து, உலகை உள்ளங்கையில் உட்கார வைத்த கழகத்தை தப்பென்று பழிக்கிறார்
மஞ்சள் துண்டின் தயவில் மக்கள் திலகத்தை வசைபாடி திரியும் கமல், மு.கருணாநிதியை மகிழ்விக்க முன்னோட்டம் பார்க்கிறாரா? என்று இப்படி செல்கிறது அந்த கவிதை.