டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த அனைத்து முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தலைமையில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இன்று டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி இராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துவதாகவும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களின் உடல்நலன் குறித்து விசாரித்த பிரதமர் அவர்கள், ராமதாஸின் உடல் நலனை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கும்படியும் கூறினார்.

தமிழ்நாட்டின் நலனுக்காக காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், அதன் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமரிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது இல்லை என்றால் ஆதினங்களே இருக்க முடியாது... கி.வீரமணி பரபரப்பு கருத்து!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் முன்வைத்தார். அவற்றை கனிவுடன் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தார்கள்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனான சந்திப்பு மிகவும் சுமூகமாகவும், மன நிறைவளிக்கும் வகையிலும் இருந்ததாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

LKG - UKG விவகாரம்.. திடீர் பல்டி அடித்த அமைச்சர்..