PMK leader anbumani Ramadoss has urged the central government to withdraw the new medical commission.
புதிய மருத்துவ ஆணைய முன்வரைவை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ கவுன்சிலை அமைப்பதற்கான மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு கடந்த 13 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழக்கியது. இந்த புதிய ஆணையத்தின்மூலம் 4 தன்னாட்சி வாரியங்களை அமைத்து இளங்கலை, முதுநிலை பாடத்திட்டம், கல்வி நிறுவன மதிப்பீடு, மருத்துவர்கள் பதிவீடு போன்றவற்றை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவை நாடாளுமன்ற பரிசீலனை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவரும் தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுகுறித்து பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய மருத்துவ ஆணைய சட்டம் சமூகநீதியை சிதைக்கும் என்றும் புதிய சட்டத்தின் அம்சங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதனமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டை 65% இருந்து 40 சதவீதமாக குறைக்க திட்டம் உள்ளதாகவும் ஏழை, ஊரக மாணவர்களை மருத்துவப் படிப்பில் சேர விடாமல் தடுக்கும் திட்டமிட்ட சதி என்றும் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே புதிய மருத்துவ ஆணைய முன்வரைவை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
