மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ. 60,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 2018-19ம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.61,084 கோடியைவிட மிகவும் குறைவு. கடந்த ஆண்டே இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என்று அப்போதே குறிப்பிட்டு இருந்தேன்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்கு மேல் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என்பதுதான் காரணம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி பணியாற்றிய மக்களுக்கு பல மாதங்களாகியும் ஊதியம் கிடைக்கவில்லை என்று கூறி போராட்டங்கள் வெடித்துள்ளன. உழைத்தவனின் வியர்வை அடங்குவதற்குள் வழங்கப்பட வேண்டிய ஊதியம் மாதக்கணக்கில் வழங்கப்படாமல் இருப்பது நியாயமல்ல.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து மீட்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் இத்திட்டத்தின்படி பணியாற்றிய மக்களுக்கான ஊதியம் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்கு மேல் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என்பதுதான்.


அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 33.34 நாட்கள் பணி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இதுவரை 37.38 நாட்கள் மட்டும் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை 10,724 குடும்பங்கள் மட்டுமே 100 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டில் இன்று வரை 44,743 குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சாதகமானவைதான் என்றாலும்கூட, இதுவரை பணியாற்றிய பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கப்படாததுதான் கவலை அளிக்கும் விஷயம்.
கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்காக தமிழகத்துக்கு ரூ.4951 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் அதைவிட ரூ. 1,000கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்தால், இத்திட்டம் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முடியும். நடப்பாண்டில் இதுவரை ரூ.4450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் சேர்த்து தமிழகத்திற்கு இன்னும் ரூ.1500 கோடி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
