தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்..!
தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கவுள்ளது. அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணிகள் ஆட்சியை பிடிக்க தீவிர பிரச்சாரம் செய்துவருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலையை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் பிரதமர் மோடி. தாராபுரத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்குசேகரித்த பிரதமர் மோடி, நாளை மதுரையில் நடக்கவுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி தென்மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு நாளை(ஏப்ரல் 2) மதுரையில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
அதற்காக கொல்கத்தாவிலிருந்து இன்று மாலை மதுரை வந்த பிரதமர் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பிரதமரின் வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.