ஆரம்பமே அமர்களம்.. பாரதி பிறந்தநாளில் ‘வணக்கம்’ என தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி...!
பாரதியாரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் வணக்கம் என தமிழில் கூறி பிரதமர் நரேந்திர மோடி உரையை தொடங்கினார்.
பாரதியாரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் வணக்கம் என தமிழில் கூறி பிரதமர் நரேந்திர மோடி உரையை தொடங்கினார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் வானவில் கலாச்சார மையம், சர்வதேச பாரதி விழா இன்று 4.30 மணியில் இருந்து இணையவழியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பாரதியார் விழாவில் சர்வதேச அளவிலும், நாடு தழுவிய அளவிலும் பல கவிஞர்களும், கலைஞர்கள் மற்றும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- தேசிய ஒருமைப்பாடு, சமூக சீர்த்திருத்தம், பெண் விடுதலைக்கு முக்கியத்துவம் அளித்தவர் பாரதியார். சுதந்திர போராட்ட வீரர்களின் பேரரசனாக பன்முகத் தன்மை கொண்டவர் பாரதியார். கவிதைகள், கட்டுரைகள் மூலம் பாமர மக்களுக்கும் விடுதலை தாகத்தை ஊட்டியவர் என புகழாராம் சூட்டினார்.
இதனையடுத்து, பிரதமர் மோடி உரையாற்றுகையில்;- வணக்கம் என தமிழில் கூறி பேச ஆரம்பித்தார். வாரணாசிக்கும் பாரதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. துணிச்சலாக செயல்பட்டவர் பாரதியார். பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன். வாழ்ந்த 39 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்தவர் என புகழாராம் சூட்டினார்.
மேலும், தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார். பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணினார். ஜகத்தில் உள்ளோர் எதிர்த்த போதிலும் அச்சமில்லை என்றவர். பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார் என பிரதமர் மோடி பேசி வருகிறார்.