தற்சார்பு என்பது பொருளாதாரமாகவும் இருக்க வேண்டும். அதே வேளையில் நவீனமயமாகவும் இருக்க வேண்டும். அதுதான் மிகவும் அவசியம். கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் அதை நோக்கி தொடர்கிறது. 

ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்ததன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 3 கோடி ஏழைகளை லட்சாதிபதிகளாக்கி இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் மோடி தலமையிலான பாஜக அரசு, எட்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து, ஆத்மநிர்பார் என்ற பெயரில் காணொலி வாயிலாக பாஜகவினர் இடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. தற்சார்பு என்பது பொருளாதாரமாகவும் இருக்க வேண்டும். அதே வேளையில் நவீனமயமாகவும் இருக்க வேண்டும். அதுதான் மிகவும் அவசியம்.

கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் அதை நோக்கி தொடர்கிறது. இந்தியா மீதான உலகத்தின் பார்வை தற்போது பெரிதும் மேம்பட்டிருக்கிறது. வலிமையான இந்தியாவை உலகம் விரும்புகிறது. இந்தியப் பொருளாதாரம் தற்போதைய நிலையில் திருப்புமுனையில் இருக்கிறது. கொரோனாவுக்குப் பிந்தைய புதிய உலகில் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். நாட்டின் எல்லைப் பகுதி கிராமங்களின் வளர்ச்சிக்கு பட்ஜெட் அறிக்கையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எல்லையோரம் உள்ள பள்ளிகளில் என்.சி.சி. மையங்கள் அமைக்கப்படும். இந்திய வேளாண் துறையை நவீனப்படுத்த இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

ட்ரோன்கள் மூலம் சேவைகள், இயற்கை விவசாய வசதிகள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ளது. நாட்டில் எவ்வளவோ லட்சாதிபதிகள் உள்ளனர். ஆனால், நாங்கள் ஏழைகளை லட்சாதிபதிகளாக்கி இருக்கிறோம். எதுவுமே இல்லாதவர்களை, வீட்டுக்கு உரிமையாளர்களாக்கி இருப்பதால், அவர்கள் லட்சாதிபதிகளாக மாறியிருக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 3 கோடி ஏழைகளை லட்சாதிபதிகளாக்கி இருக்கிறோம்” என்று பிரதமர் மோடி பேசினார்.