PM Modi: நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கா? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை.!
கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது முழு ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது, கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசியை விரைவுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று கர்நாடகாவில் முதல் முதலில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஒமிக்ரான் பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 27 மாநிலங்களில் நேற்று ஒரே நாளில் 428 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,461ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில், கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்த கொரோனா பாதிப்பு இன்று 1.67 லட்சத்தைக் கடந்துள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநிலங்கள் அந்தந்த பகுதிகளின் நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது முழு ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது, கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசியை விரைவுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.