மாமல்லபுரம் கடற்கரையில் தான் எழுதிய கவிதையின் தமிழாக்கத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் இருக்கும் மாமல்லபுரத்தில் கடந்த வாரம் சந்தித்து உரையாற்றினர். இருநாட்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்பட்டது. உலக நாடுகளை உற்று நோக்க வைத்த சந்திப்பாக இது அமைந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில் கலந்துகொள்ள வந்திருந்த பிரதமர் மோடி முதல் நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கோவளத்தில் தங்கியிருந்தார். இரண்டாம் நாள் காலையில் கடற்கரையில் பிரதமர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு கிடந்த பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் போன்ற குப்பைகளை தனியாளாக பிரதமர் அள்ளி சுத்தம் செய்வது போன்ற புகைப்படம் மற்றும் காணொளிகள் வெளியாகி இருந்தது.

அவை வைரலாக சமூக ஊடங்களில் பரவி வந்தது.பலர் பிரதமரை பாராட்டியிருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமரின் விளம்பரம் மோகம் தான் இந்த செயல் என்று விமர்சனமும் செய்திருந்தன. இதனிடையே சீன அதிபருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு டெல்லி சென்ற மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்று வெளியிட்டிருந்தார். மாமல்லபுரம் கடற்கரையில், கடலின் அழகை ரசித்து தான் எழுதியதாக குறிப்பிட்டிருந்தார். அந்த கவிதை ஹிந்தி மொழியில் இருந்தது.

இந்தநிலையில் தற்போது அதன் தமிழாக்கத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'அலைக்கடலே.. அடியேனின் வணக்கம்' என்று தொடங்கும் அந்த கவிதையில் கடலின் தன்மைகளை பிரதமர் கூறியிருக்கிறார். கடலுடன் மனித வாழ்வின் செயல்பாடுகளை ஒப்பிட்டு எழுதியுள்ளார். பிரதமர் மோடியின் கையெழுத்துடன் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது. அதை பலர் பகிர்ந்து வருகின்றனர்.