ப்ளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள்... அதிரடி மாற்றத்தை புகுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!
இந்த முறை வித்தியாசமான முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று காலை 11 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த முறை வித்தியாசமான முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் சராசரி அடிப்படையில் 50 மதிப்பெண்களும், 11ம் வகுப்பில் 20 விழுக்காடும், 12ம் வகுப்பில் செய்முறை மற்றும் அகமதிப்பீட்டில் 30 விழுக்காடு மதிப்பெண்களும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஒரு பாடத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் 88.5 என்று வந்தால் அதை 89 ஆக மாற்றி முழு மதிப்பெண் வழங்கும் முறை கடந்த ஆண்டு வரை இருந்தது. ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் தசம முறையில் இருக்கும். அதாவது, உயர்கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கு ஏற்ப கட்-ஆப் மதிப்பெண்களை கருத்தில் கொண்டு அவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகை அப்படியே தசம எண்ணில் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.