94 நாட் அவுட்... ’நல்ல கண்ணு’ என்பதை காரணப் பெயராக மாற்றியவர் என கமல் வாழ்த்து...
இவருக்கு பெயர் இட்டது பெற்றோரே எனினும் தான் வாழ்ந்த விதத்தால், தன் பெயரை “காரணப் பெயராக்கிய” பெரியவர் திரு. நல்லக்கண்ணு அய்யாவிற்கு இன்று பிறந்த நாள்
இன்று 94 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணுவுக்கு முகநூல் பக்கங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் மூலமாகவும் வாழ்த்துகள் குவிகின்றன.
நல்லகண்ணு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி நெல்லையில் பிறந்தவர். தன் 18வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தார். கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இன்று வரை மக்கள் பிரச்னைகளுக்காக அயராது போராடி வருகிறார். கட்சி பேதமின்றி அனைவராலும் நேசிக்கப்படும் எளிய மனிதரும் கூட.
பிறந்தநாள் காணும் அவரை ,மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “இவருக்கு பெயர் இட்டது பெற்றோரே எனினும் தான் வாழ்ந்த விதத்தால், தன் பெயரை “காரணப் பெயராக்கிய” பெரியவர் திரு. நல்லக்கண்ணு அய்யாவிற்கு இன்று பிறந்த நாள். நல்லவரையும் நல்லவற்றையும் வாழ்த்துவோம் மனதார” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
இன்று காலை சென்னை தியாகநகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற மு.க. ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழும் வரலாறு, தியாகத்தின் திருவுருவம், பாட்டாளிகளின் பாதுகாவலர், தலைவர் கலைஞரின் தோழர், எங்களின் வழிகாட்டி அய்யா நல்லகண்ணு அவர்கள் நலமுடனும் துடிப்புடனும் வாழ்ந்து வழிகாட்ட வணங்கி வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.